Archives: ஜனவரி 2020

போகிறது, போகிறது, போயேவிட்டது

நகைச் சுவை மிக்க ஓவியர் பாங்க்ஸி, மற்றுமொரு குறும்புதனத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிறுபெண் பலூன் ஒன்றினை வைத்திருப்பது போன்று, அவர் வரைந்த படம், லண்டனிலுள்ள சோத்பை என்ற, ஏலம் விடப்படும் இடத்தில், ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. ஏலம் விடுபவர் “விடப்பட்டது” என்று சத்தமாகக் கூறிய மறு வினாடியில், ஓர் எச்சரிக்கை மணி அடித்தது, சட்டத்தில் இணைக்கப் பட்டிருந்த அ ந்த படம், துண்டுகளாக வெட்டும் கருவியின் வழியே நழுவி கீழே இறங்கியது. ஏலம் எடுக்க வந்திருந்தவர்களின் மத்தியில் இருந்த பாங்க்ஸி, தன்னுடைய மிகச் சிறந்த படம் அழிகிறதே என, “போகிறது, போகிறது, போயேவிட்டது” என்று கத்தினார்.

பாங்க்ஸி தன்னுடைய குறும்புதனத்தை செல்வந்தர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார். அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை. செல்வத்துக்குள்ளும் அநேக குறும்புத்தனங்கள் நிறைந்துள்ளன. தேவன், “இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” (வ.4-5) என்கின்றார்.

உலகப் பொருட்கள் பணத்தைப் போன்று அழிந்து போகக் கூடியன. அவற்றைச் சம்பாதிக்க, நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனாலும் அவற்றை இழக்க அநேக வழிகள் உள்ளன. தவறான முதலீடுகள், பணமதிப்பு குறைகிறது, நாம் செலவழித்ததைக்  கட்டவேண்டியுள்ளது, திருடர்கள் திருடுகின்றார்கள், நெருப்பும், வெள்ளமும் அழித்து விடுகின்றது, இவற்றையெல்லாம் தாண்டி பணத்தைச் சேமித்து வைத்திருந்தால், தொடர்ந்து செலவுகள் வந்து கொண்டேயிருக்கிறது.. கண் மூடி விழிப்பதற்குள் உன்னுடைய வாழ்வு போய்க்கொண்டேயிருக்கிறது, இன்னும் போய் கொண்டேயிருக்கிறது, போயே விட்டது. 

என்ன செய்வது? தேவன் மேலும் சில வார்த்தைகளைச் சொல்கின்றார். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு, நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (வ.17-18). உன் வாழ்வை இயேசுவின் மேல் கட்டு, அவரே உன்னை என்றென்றும் காக்க வல்லவர்.

பெலவீனரைப் பெலப்படுத்தல்

1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும்  தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள். 

இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

முழுமையான ஜீவன்

1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.

ஒரு பழைய மண் பானை

நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)

மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு  இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.

 “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.